கார் ஓட்டும் சுகமே தனி சுகம்தான்... மனதில் நினைத்துக் கொண்டு ஸ்டியரிங்கை பயங்கர வேகமாக திருப்பினான் பரத். அவனுக்கு வளைவு நெளிவு நிறைந்த பாதைகளில் கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதற்காகவே பிரத்யேகமாக இந்த பாதையை பரத் தேர்வு செய்திருந்தான். இருப்பினும் நேரம் அதிகம் இல்லாததால் மனதளவில் ஒரு சின்ன வருத்தம்.

"பால் வாங்க வேண்டும்.... தாமதமாகப் போனால் பால் காலியாகிவிடும். பிறகு என்ன செய்வது?" நினைக்கும் போதே மனதளவில் ஒரு பயம் தொற்றிக்கொண்டது. மேலும் வேகத்தை கூட்டினான்.

இப்போது ஸ்டியரிங்-இல் முன்பைவிட பயங்கர வேகம் காட்டினான். குறுக்கே யாராவது வந்தால் அவ்வளவுதான். கூழ்..கூழ்.. ஆகிவிடுவார்கள். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கே ஒரு நாய் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பரத்துக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி. உடனே ஸ்டியரிங்கை நாய்ப் பக்கமாய் திருப்பினான். கார் நேரே போய் அந்த நாயின் மீது ஏறியது. ஏறிய வேகத்தில் நாய் சட்னியாகியது... அந்த நாயின் ரத்தம் கார் கண்ணாடி மேல் தெறித்தது. அதைப் பார்த்த பரத்துக்குள் ஒரு மகிழ்ச்சி உணர்வு ஊடுருவியது. அப்பாடா... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

உடனே அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

அலறியடித்துத் திரும்பினான்.

"ஹலோ பாஸ் டைம் ஓவர்..." என்றது அந்தக் கைக்கு சொந்தமான குரல்

"சே! அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா..." என்று அலுத்துக் கொண்டே அந்த வீடியோ கேம் பார்லரிலிருந்து வெளியேறினான் பரத்.

வெளியே அவனது பழைய சைக்கிள் நின்றுக் கொண்டிருந்தது. அதில் ஏறி ஒரு கையில் பால் கிண்ணத்துடன் ஒரு கையில் சைக்கிள் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு கிளம்பினான்.

- - - - - - - - - -

மழைய ரசிக்கிறதே ஒரு தனி சுகம்தான்... அதுவும் சூடான காஃபியோட ஜன்னலோரமா உக்காந்துக்கிட்டு ரசிக்கிறது... இன்னும் சூப்பர் அனுபவம்... அதைத்தான் இப்ப நான் செஞ்சிக்கிட்டிருக்கேன்...

என் பேரு ராகுல்... மழைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

ஏன் தெரியுமா... மழை அதிகமா வந்தா ஸ்கூல் லீவ் விட்ருவாங்க... இன்னிக்கும் அப்படித்தான் லீவ் விட்டுட்டாங்க... அதுக்கா மட்டுமில்ல... பொதுவாவே எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும்... இன்னிக்கு மத்தியானத்திலருந்து நான் எங்க வீட்டுக்கு வெளியில மழையில விளையாடிக்கிட்டிருந்தேன்... அம்மா காஃபி கொடுக்க கூப்டாங்கன்னுதான் உள்ள வந்தேன் இல்லன்னா இன்னும் விளையாடிக்கிட்டுத்தான் இருந்திருப்பேன்...

ம்ஹ்ம்....(அழுகுரல்)

என்ன யாரோ அழுற சத்தம் மாதிரி கேக்குதேன்னு பாக்குறீங்களா... அது என்னமோ தெரியில கீழ ஹால்ல.. எங்கம்மாதான் ரொம்ப நேரமா அழுதிக்கிட்டிருக்காங்க... ஏன்னே தெரியில....

அம்மா அழாதேம்மா.... ஏன் அழற நீ..?

இன்னிக்கு காலைல 7 மணியிலருந்து மழை பெஞ்சிக்கிட்டிருக்கு... இப்போ மணி சாயங்காலம் 5 ஆகப்போகுது... இன்னும் மழை விட்டமாதிரி தெரியில....

எங்க வீட்டு ஜன்னல்லருந்து பாத்தா ஒரு பெரிய ஹைவே தெரியும்... வானம் ரொம்ப இருட்டிக்கிட்டே பெய்ற மழைங்கிறதால வண்டிங்கள்லாம் லைட் போட்டுக்கிட்டு ஓட்றாங்க... பாக்கவே ரொம்ப சூப்பராயிருக்கு...

எங்க வீடு கொஞ்சம் ரிமோட்டான ஏரியாவுல இருக்கிறதால எப்பவுமே ரொம்ப அமைதியா இருக்கும்... எப்பவாவது ஹைவே ரோட்ல வண்டி பாஸாகும்போது வர்ற சவுண்டைத் தவிர வேற ரொம்ப வண்டிச்சத்தங்கள் கேக்காது...

ஆனா இப்ப கொஞ்ச நேரமா என்னன்னு தெரியில எங்க வீட்டுக்கு முன்னாடி நிறைய வண்டிங்க வந்து நின்னுக்கிட்டிருக்கு.... நிறைய கெஸ்ட்டுங்க வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்... ஏன்னுதான் தெரியில....

கீழே ஹாலில்... ராகுலின் பிணத்தை நடுவீட்டில் கிடத்தியிருந்தார்கள். ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார்.

பாவம்பா... சின்ன பையன்... 4வதுதான் படிக்கிறான்... வெளியில மழையில விளையாடிக்கிட்டிருந்திருக்கான்... அவங்கம்மா காஃபி சாப்பிட கூப்பிட்டிருக்காங்க... ரோட்டை க்ராஸ் பண்ணி வரும்போது ஒரு லாரி தூக்கியடிச்சிடிச்சாம்...

- - - - - - - -